கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள் தற்போது... - மு.க.ஸ்டாலின் பதிவு

உங்கள் அழுத்தம் காரணமல்ல, சூழ்ச்சிதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.

பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.

பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன். Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!

Also read:காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.