சென்னை,
திண்டுக்கலை சேர்ந்த இந்துராணி (வயது 38) என்பவர், சென்னையில் வசிக்கும் தன் தாயை பார்க்க வந்துள்ளார். சென்னை புறநகர் மின்சார ரெயிலில் அவர் பயணித்த போது, கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, ரெயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பயணச்சீட்டு தொலைந்து விட்டதால், அவர் பயணி அல்ல எனக்கூறி, கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ரெயில்வே அதிகாரிகளின் கடமை. கதவுகள் இல்லாததால் புறநகர் ரெயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. ஆனாலும், இதன் மூலம் அதிகாரிகள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததாக கூறி இழப்பீடு வழங்க மறுக்க முடியாது. போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாத ரெயில்வே நிர்வாகத்துக்கும் இந்த அசம்பாவித சம்பவத்தில் பங்கு உள்ளது. அதனால், பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீட்டை 6 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.