தமிழக செய்திகள்

2 பேருக்கு ரூ.4¾ லட்சம் அபராதம்

2 பேருக்கு ரூ.4¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி வேந்தன்பட்டி பகுதியில் கிராவல் மண் எடுப்பதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பொன்னமராவதி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொன்னமராவதி தாலுகா பிடாரம்பட்டியை சேர்ந்த மலையாண்டி என்பவர் தனது வீட்டின் பின்புறம் கண்மாயில் உள்ள கிராவல் மண்ணை எடுத்து மோட்டார் மூலம் சுத்தம் செய்து மணலாக மாற்றி விற்பனைக்காக குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 16 யூனிட் மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வேந்தன்பட்டி பகுதியை சேர்ந்த பிரியாங்களம் ராசு என்பவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 யூனிட் மணலையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அரசின் இலவச மின்சாரத்தை வியாபார நோக்கத்திற்கு மின்மோட்டார் மூலம் பயன்படுத்தியதற்காகவும், கிராவல் மண்ணை பதுக்கியதற்காகவும் மலையாண்டி, ராசு ஆகியோ மீது தலா ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.