தலைவாசல்,
தலைவாசல் அருகே வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. சாமிக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் வீரகனூர் பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் ஆறகளூர் காமநாதஈஸ்வரர் கோவில், பெரியேரி தான்தோன்றீஸ்வரர் கோவில், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், நாவக்குறிச்சி வைத்தீஸ்வரர் கோவில், சிறுவாச்சூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.