சென்னை
சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு சென்னை ஐக்கோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலா வரும் 27 ந்தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை ஐகோர்ட் பிப்ரவரி 4 ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலாவும், இளவரசியும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். இதையடுத்து சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார். அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வருகிற 27-ந்தேதி விடுதலையாக உள்ளார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
27-ந்தேதி எந்த நேரத்தில் அவர்களை விடுதலை செய்வது என்பது குறித்து போலீசார் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாது என்பதும் தெரியவந்துள்ளது.