சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, விரைவில் விடுதலையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சசிகலா வெளியே வருவதற்கும், அதிமுக பொதுக்குழு கூடுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கவே பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் சசிகலா குறித்து பேசுவதற்காக அல்ல என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.