5 மணி நேரம் சாட்சியம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பென்னிக்சின் நண்பர் சங்கரலிங்கம் ஆஜரானார். நேற்று பகல் 11.30 மணியளவில் ஆஜராகி சாட்சியம் அளிக்கத்தொடங்கினார்.அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கைதான போலீசார் தரப்பு வக்கீல்களும் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் வந்தார்
பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் கூறுகையில், பென்னிக்சின் நெருங்கிய நண்பர் சங்கரலிங்கம் கோர்ட்டில் ஆஜராகி 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அப்போது அவர், சம்பவத்தின் போது ஜெயராஜ், பென்னிக்சை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அன்று இரவு முழுவதும் அவர்களை கடுமையாக தாக்கியதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறிய சத்தம் வெளியில் கேட்டது. இரவு நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வெளியில் வந்து சிறிது நேரம் நின்றார். மறுநாள் அவர்கள் இருவரும் ரத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். உடன் நானும் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, ஜெயராஜ்-பென்னிக்சை கோவில்பட்டி சிறைக்கு அழைத்து சென்ற வாகன டிரைவர் நாகராஜன் வருகிற 14-ந் தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார் என்று வக்கீல் தெரிவித்தார்.