கோவை,
தற்போதுள்ள சூழலில் ஸ்மார்ட் போன் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ளது. அதில் யூடியூப் வீடியோவை பார்த்தால் பணம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், ஸ்மார்ட் போன் தொடர்பான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன முறையில் மோசடி நடைபெறுவதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மைவி3ஆட்ஸ் (My V3 Ads) நிறுவனத்தின் மீது கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கோவையில் திரண்டுள்ளனர். தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி அவர்கள் ஒன்று கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.