தமிழக செய்திகள்

குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு

ஆற்காடு அருகே குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

வாலாஜா தாலுகா அருங்குன்றம் அருகே உள்ள மாலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் முரளி, விவசாயி. இவரது மகன் நித்திஷ் கண்ணா (வயது 10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளான். அப்போது அங்கு இருந்த மரத்தில் பூப்பறிக்க முயன்றுள்ளான்.

இதில் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துவிட்டான். இதை பார்த்த அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சேகர் என்பவர் நித்திஷ் கண்ணாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இந்த நிலையில் நித்திஷ் கண்ணா சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT