உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு மாம்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேப்பிலியூர் அருகே வந்தபோது மாணவர்கள் சிலர் பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். இதைப்பார்த்த பஸ் டிரைவரான மேப்புலியூர் கிராமத்தை சேர்ந்த நடன சபாபதி(வயது 56) பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை உள்ளே வந்து நிற்கும்படி கூறினார். ஆனால் அவரது அறிவுரையை ஏற்காத மாணவர்கள் ஆத்திரம் அடைந்து நடனசபாபதியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.