சென்னை,
சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி மாநில எல்லையில் தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு தேமுதிகவினர் வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருப்பதாக தெரிவித்தார். மேலும் வேல்யாத்திரையை பாஜகவினர் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருவதாகவும், இதனால் நாட்டிற்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் கூறினார்.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரசால் தானும், தனது கணவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததால், அது பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும், மாணவர்களின் நலனுக்காக பள்ளிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளி வைப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.