சென்னை,
சென்னையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உடல் சோர்வை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டது. இதற்கு வாகன ஒட்டிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டும் 18 போக்குவரத்து சிக்னல்களில் சென்னை மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டு 40 இடங்களில் சென்னை மாநகராட்சி பசுமை பந்தல்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில், 8 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. 22 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 இடங்களில் பசுமை பந்தல் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.