தமிழக செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் கிரானைட் கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் வாகன தணிக்கை ஈடுபட்டனர். அப்போது கங்கலேரி பஸ் நிறுத்தம் அருகில் அந்த வழியாக வந்த 4 லாரிகளை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் கிரானைட் கற்கள் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போச்சம்பள்ளி குள்ளனூர் ஆனந்தன் (வயது42), தட்டக்கல் முருகேஷ் (37), விக்கினம்பட்டி சூர்யா (23), வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகர் அன்பழகன் (29) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேலம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.