சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் கன மழையால் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதனைதொடர்ந்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதற்கிடையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.
இந்ந நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் இயக்கம் சரியாக உள்ளதா? என்பது பற்றி ஆய்வு கேட்டறிந்தார்.
மேலும் புழல் ஏரியில் நீர் இருப்பு, மதகுகள் சீரமைப்பு, ஆகாயத்தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை நடவடிக்கை குறித்து செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏர்யில் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.