தமிழக செய்திகள்

ஆர்பி உதயகுமாரின் தாயார் மறைவு குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்

ஆர்பி உதயகுமாரின் தாயார் இறந்து கிடக்கிறார்.. அதனை பார்க்க சொல்லுங்கள் என்று செங்கோட்டையன் பேசினார்.

கோபி செட்டி பாளையம்,

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்கவேண்டும். இல்லை என்றால் ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைப்பேன் என்று கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அவருடைய கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளர்களின் பதவியும் பறிபோனது.

இதற்கிடையே திடீரென டெல்லி சென்று மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஒற்றுமை என்ற பெயரில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று சிலர் திட்டம் தீட்டுகின்றனர், எடப்பாடி பழனிச்சாமி பயணத்திற்கு அலை அலையாக மக்கள் வருவதை தாங்கிக்கொள்ள முடியாத வயிற்று எரிச்சல் பிடித்த மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியை தரும் என்று கூறியிருந்தார்.இந்தநிலையில் நேற்று கோபி குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணமடைந்து இருக்கிறார். முதலில் அவரை அதை பார்க்க சொல்லுங்கள். நீண்ட நாள் இந்த இயக்கத்தில் நான் இருக்கிறேன். என்னிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை என்பதுதான் எனக்கு வேதனை என்று கோபத்துடன் கூறினார். ஆர்பி உதயகுமார் தாயார் மறைவு குறித்த செங்கோட்டையனின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, ஆர்பி உதயகுமார் தொடர்பாக கேட்டார்கள். அப்போது சொன்ன கருத்துக்கு மன்னிக்க வேண்டும். அவர் துக்கத்திலேயே தாயை இழந்து கண்ணீரில் மல்கி கொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினரை நேரில் சந்திக்க இயலவில்லை. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவருடைய தாயை இழந்து துக்கத்திலும், துயரத்திலும் இருக்கும் இந்த வேளையில், தாயின் அருமை பெற்ற மகனுக்கு மட்டுமே தெரியும். துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர் ஆத்மா சாந்தியடைய அனைவர் சார்பாக கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.