சென்னை,
தமிழகத்தில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சூழலும் காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு, பாதாள சாக்கடை மரணங்கள் தொடர்புடைய வழக்கு ஒன்றின் விசாரணையில், பாதாள சாக்கடை மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு. அதனால், ஆணையர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்படுவர் என தெளிவுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்க செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியதுடன், மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு 3 வாரங்கள் கெடு விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.