தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் மேலஉளூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. திறந்த காரில் நின்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். மக்கள் தலைவராக இருந்த அவர், தமிழகத்தை பாதிக்கக்கூடிய மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்துக்குள் நுழையவிடவில்லை. ஆனால் அவருடைய பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் பா.ஜனதாவின் நிழல் அரசாக செயல்படுகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரை காக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று சட்டப்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து ஜெயலலிதா பெற்று தந்தார்.
தற்போது தண்ணீர் இன்றி கடைமடை பகுதிகளில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. மற்ற பகுதிகளிலும் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிரை காக்க கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று தருவோம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறுகிறார்கள். ஆனால் தண்ணீர் தர கர்நாடக முதல்-மந்திரி மறுத்துவிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்-அமைச்சராக்கினார்.
ஆனால் அவர் பா.ஜனதாவின் ஏஜெண்டு போல் செயல்பட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் சிறைக்கு செல்ல நேரிட்டதால் சசிகலாவால் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க முடியவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக சசிகலா கொண்டு வந்தார். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே அவர் தனது உண்மையான நிறத்தை வெளிகாட்டினார். தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரும் பா.ஜனதாவின் ஏஜெண்டு போல செயல்பட்டு வருகிறார்.
ஒரத்தநாடு தொகுதியை சேர்ந்த ஒருவர் (வைத்திலிங்கம்) சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். 2001-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? இப்போது அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது மக்களுக்கு தெரியும். சோழ மண்டலத்தின் பெருமையே விசுவாசம் தான். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டியவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் செய்துவிட்டார். தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தான் தமிழகம் முழுவதும் ஏற்படும். துரோகத்துக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம்.
விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலுக்கும் இங்கே இடம் கொடுக்கமாட்டோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பஸ் கட்டண உயர்வை குறைப்போம். எனவே ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.