சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை முகவர்களாக 2.46 லட்சம் பேர் களத்தில் உள்ளனர்.
முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வரச் சொல்லி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை அளிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 6 கோடியே 30 லட்சத்து 49 ஆயிரத்து 345 பேருக்கு, அதாவது 98.34 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 5 கோடியே 22 லட்சத்து 42 ஆயிரத்து 884 படிவங்கள் அதாவது 81.48 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். பணியாற்றி வருகின்றனர். அங்கு 10 லட்சத்து 5 ஆயிரத்து 126 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 98.39 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 648 படிவங்கள் அதாவது 87.87 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.