சென்னை,
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் அங்கிருந்தவர்களோடு இணைந்து நோன்பு கஞ்சி சாப்பிட்டார்.
இதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
முன்னாள் முதல்வர்கள் அண்ணாவையும், கருணாநிதியையும் இணைத்தது இஸ்லாமியர்களின் மிலாது நபி நிகழ்ச்சிதான். சிறுபான்மையினர் உடனான திமுகவின் உறவு காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
1990 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நலக்குழுவை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மேலும் ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை அவர் அதிகப்படுத்தினார். கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் இணைந்தும், பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமிய தோழர்கள்.
இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தை மிக புனிதமான மாதமாகவே கடைபிடிக்கின்றனர். நான் ஆற்றுவது எழுச்சி உரை அல்ல, உணர்ச்சி உரை.
மதம், சமயம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்குரியவை. தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.