தமிழக செய்திகள்

சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம்

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா தலைமை செயலகத்தில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது

சென்னை,

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா தலைமை செயலகத்தில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படுகிறது. கருணாநிதி படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதன்படி கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பங்கேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜனாதிபதியிடம் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை (சனிக்கிழமை) காலை 11.15 மணியளவில் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து சபாநாயகர் அப்பாவு சென்னை திரும்புகிறார்.