தமிழக செய்திகள்

சுய தொழில்கள் தொடங்க கடன் பெறுவது குறித்த சிறப்பு முகாம்

நெமிலி தாலுகா அலுவலகத்தில் சுய தொழில்கள் தொடங்க கடன் பெறுவது குறித்த சிறப்பு முகாம் நடந்தது.

நெமிலி தாலுகா அலுவலகத்தில் நேற்று பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் பெறுவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு நெமிலி தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார். முகாமில் நெமிலியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சில்லரை வியாபாரம், சிறுதொழில்கள், விவசாயம் சார்ந்த உபதொழில்கள், மரபுவழி சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்பட்டதாரிகள் சுய தொழில் தொடங்குதல் ஆகியவற்றிற்கு கடன் கேட்டு விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிப்பது குறித்து விவரித்து கூறப்பட்டது. தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நகர கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் முறைகளும் விளக்கப்பட்டது.

இதில் துணை தாசில்தார்கள் செல்வி, பன்னீர்செல்வம், பாஸ்கரன், கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT