தமிழக செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார்

தி.மு.க இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை பரிசளித்தோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரை சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக மத்திய அரசுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

உறுதியளித்தார்

தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்து துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நேரில் சந்திப்பு

தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நேரில் சந்தித்து உரையாடினோம். போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு

அவரது கருத்துக்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம். இந்த சந்திப்பின்போது, தி.மு.க இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை பரிசளித்தோம்.