வத்திராயிருப்பு,
மகாராஜபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரினால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
அரசு பள்ளி
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது.
தேங்கி நிற்கும் மழைநீர்
இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைநீரில் நடந்து கொண்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டி, நிலை உள்ளது.
மழை பெய்யும் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்குவதாகவும், மழைநீர் வெளியில் செல்வதற்கு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் உடனே வெளியேற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.