தமிழக செய்திகள்

தொகுதி பங்கீட்டில் இழுபறி? டிடிவி தினகரன் நாளை டெல்லி பயணம்

அதிமுகவிடம் இருந்து பாஜக 30 தொகுதிகளும், அமமுகவுக்கு 8 தொகுதிகளும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் என மொத்தம் 50 சீட்கள் கேட்பதாக சொல்லப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் சூழலில், அதிமுக தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நேரடியாக எடப்பாடி பழனிசாமி அவசரமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

அதிமுகவிடம் இருந்து பாஜக 30 தொகுதிகளும், அமமுகவுக்கு 8 தொகுதிகளும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் என மொத்தம் 50 சீட்கள் கேட்பதாக சொல்லப்படுகிறது. சிறு கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த பரபரப்புக்கு நடுவே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை டெல்லி செல்ல உள்ளார். நாளை காலை 11 மணிக்கு டிடிவி தினகரன் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.