தமிழக செய்திகள்

திமுக ஆட்சியால்தான் இரட்டை இலக்க வளர்ச்சி என ஸ்டாலின் பொய் கூறுகிறார்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் ரூ.3,500 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் இப்போது தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள தொழில் வளர்ச்சி, பொருளாதார பலன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களால் கிடைத்து வருகின்றன. அதிமுக உழைப்புக்கான அறுவடையை மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார்.

மறைந்த தலைவர்களை நான் அவமதிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தலைவர்கள் குறித்து விமர்சித்தால், அதிமுகவும் அந்த வகையிலேயே பதிலடி கொடுக்கும். அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை திமுகதான் அவமதித்து வருகிறது. காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா?

பணத்தை திருடுவார்கள், நகையை திருடுவார்கள், ஆனால் திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். மக்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்னி முறைகேடு குறித்து விசாரிக்கப்படும். ஸ்கேன் செய்து உடல் உறுப்புகள் சரியாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். மக்கள் உஷாராக இல்லாவிட்டால் கிட்னி காணாமல் போய்விடும்” இவ்வாறு அவர் கூறினார்.