தமிழக செய்திகள்

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவு: இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர் கனமழை காரணமாக கடந்த 6 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு வசித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80 பேர் வரை இதில் சிக்கினர். அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு மீட்புப்பணி நடைபெற்ற நிலையில், இதுவரை 61 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.