திருவள்ளூர்,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு தொழில்நுட்பம் சார்ந்த தானியக்க நீர்த்தேக்க செயல்பாடுகளை தொலை தூர இடங்களில் இருந்து அப்போதைய தரவை சேகரித்து செயல்பாட்டு நிலைகளைக் கட்டுப்படுத்தும் சென்சார் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்கான மென்பொருள் பொருத்தமட்டு சோதனை அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் மதகுகளின் நிலை, வெள்ளத்தின் போது அவசரக்கால நீர் வெளியேற்றம், நீரைத் தேக்கி வைத்தல் மற்றும் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல் போன்ற முடிவுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது நிர்வாகத்துறை அலுவலகத்தில் இருந்தே தானியக்க முறையில் செயல்படுத்த முடியும்.
இதுகுறித்து நீர்வளத்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, நீர்த்தேக்கத்தில் உள்ள உபரிநீர் வெளியேற்றும் இணைப்பு கால்வாய் மதகு, பேபி கால்வாய் மதகு என மொத்தம் 22 மதகுகளும். செம்பரம்பாக்கம் ஏரியில் 24 மதகுகளும், புழல் நீர்த்தேக்கத்தில் மதகுகளும் உள்ளன.
தற்போது பொருத்தப்பட்டு உள்ள சென்சார் தொழில் நுட்பம் மூலம் சரியான நேரத்தில் தகவல் பெறுதல், வெளிப்படையான நீர் விநியோகம், அணைக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்தல், வெள்ளத்தை கண்காணித்தல் மற்றும் வெளியேற்றுதல், பல்வேறு நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு அளவுகளைச் சீர மைத்தல் ஆகியவை செய்ய முடியும். பூண்டி ஏரியில் முதன்மைக் கட்டுப்பாட்டு மையமும் அதனுடன் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தின் மொத்தச்செலவு ரூ.32 கோடியாகும். சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து நீர்வளத்துறை இந்தத் தானியக்க தொழில்நுட்பத்தை நிறுவி உள்ளது என்றார்.