சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், வென்டிலேட்டர் மற்றும் அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
அதேபோல பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை உருவாக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
எனவே நமது நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைத்திட, போதுமான கருவிகள் இருக்கின்றனவா என்பது குறித்து அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்.
குறுகிய காலத்திற்குள் மருத்துவக் கருவிகளை, எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான வாய்ப்புகளையும் உற்று நோக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.