சென்னை,
தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் அண்ணா 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள ஆர்.பி.கே. திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தது மாணவர்கள் என்பதை மறந்துவிட முடியாது. மாணவர்கள் நினைத்தால், அரசியல், பொருளாதார நிலையில் அனைத்தையும் சரி செய்ய முடியும். இனம், மொழியை காக்க மாணவர்கள் முன் வர வேண்டும். நீட்தேர்வு பிரச்சனையில் மத்திய அரசு கவலைப்படவில்லை என்றால் மாநில அரசு வலியுறுதியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.