கடற்கரை வாலிபால் போட்டி
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கடற்கரை வாலிபால் போட்டி குன்னம் தாலுகா, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை லெப்பைக்குடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள் தொடங்கி வைத்தார்.
14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட கடற்கரை வாலிபால் போட்டிகள் அனைத்திலும் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
தங்கப்பதக்கம்
இதேபோல் கடந்த 8-ந்தேதி நடந்த 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கடற்கரை வாலிபால் போட்டிகள் அனைத்திலும் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து, அந்த அணிகளின் வீரர்-வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில அளவிலான கடற்கரை வாலிபால் போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தனித்தனியே நடத்தப்பட்ட கடற்கரை வாலிபால் போட்டிகளில் அனைத்திலும் முதலிடம் பிடித்த சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் ஹரிகிருஷ்ணன், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.