சென்னை,
பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படை கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் பகுதியில் தேடி வந்தது. இதனையடுத்து தலைமறைவான ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து ஜெயகோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் தற்போது ஜெயகோபலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேனர் வைத்த கொடி கட்டிய பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிபடை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ஜெயகோபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.