சென்னை,
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். அலுவல் பணிகளைத் தாண்டி பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்ப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு காவலர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனை தவிர்க்கும் வகையில், சென்னையில் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில் யோகா பயிற்சி, உளவியல் ரீதியான பயிற்சி, நல்வாழ்வு பயிற்சி வகுப்பு என பல பயிற்சிகள் அதில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், காவலர்கள் தங்கள் பணியிலும், குடும்ப சூழல் காரணமாகவும் சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டு விடுகிறது என்பதால், அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு உயிரை காப்பது மிகப்பெரிய செயல் என்பதால், தற்கொலை எண்ணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.