சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டார். அதேபோல், பாஜகவின் முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இருவரின் டெல்லி பயணமும் தமிழக பாஜகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பாஜகவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவது, கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மேலிடத்தின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன், தேசிய தலைவர்களை சந்தித்து கட்சியின் முக்கியப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு கட்சிப் பணிகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம் என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே, தமிழக பாஜக தலைவருக்கு டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் டெல்லியில் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசனின் டெல்லி பயணம் தமிழக பாஜகவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருடனும் தேசிய தலைமை நடத்தும் ஆலோசனைகளுக்குப் பிறகே, அவர்களின் பயணத்துக்கான முக்கிய காரணங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.