திரு.வி.க.நகர்,
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 22-வது தெருவில் வசித்து வந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்ற யாசிகா(வயது 21). சினிமா துணை நடிகையான இவரது சொந்த ஊர் திருப்பூர் ஆகும்.
இவர், திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலரான பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபு (22) என்பவருடன் கணவன்-மனைவி போல் வசித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக மோகன்பாபு, இவரை தவிக்கவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதால் மனம் உடைந்த யாசிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு முன்னதாக யாசிகா, தனது தாயாருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு தகவல் அனுப்பி இருந்தார். அதில், நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதையடுத்து யாசிகாவின் தாயார் எஸ்தர் பியூலாராணி, பெரவள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது மகள் யாசிகாவின் தற்கொலைக்கு காரணமான மோகன்பாபு மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, யாசிகா தற்கொலை செய்து கொண்ட வீட்டில் சோதனை நடத்தினார். அதில் யாசிகாவின் டைரி சிக்கியது. அதில் அவர், தனது காதலன் மோகன்பாபுவுக்கு உருக்கமாக எழுதிய 3 பக்க கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் அவர், நீ என்னை புரிந்து கொள்ளவில்லை. நான் உன்னுடன் மனைவியாக வாழ்ந்த நிலையில் என்னை விட்டு நீ பிரிந்து சென்றுவிட்டதால் நான் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் மன நிம்மதி இன்றி தவித்து வருகிறேன். நான் இறந்த பிறகாவது என்னை நீ மறக்கமாட்டாய் என்று நினைக்கிறேன் என்பது போன்று உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், யாசிகாவின் தற்கொலைக்கு காரணமான அவரது காதலன் மோகன்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.