தமிழக செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகலில் உபரி நீர் திறப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT