சென்னை,
டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.
தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாசாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் தமிழ் அகடாமி அமைத்தற்காக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் தமிழ் அகடாமி அமைத்தற்காக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில்,
தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவண செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.