மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித்துறை மந்திரியுமான ஈஸ்வரப்பா நேற்று காலை வந்தார். பின்னர் அவர் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை பயப்பக்தியுடன் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் குங்குமம், விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த ஈஸ்வரப்பா நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடகாவுக்கும்-தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கர்நாடக மக்களும், தமிழக மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர். காவிரி விவகாரம் அரசியல் செய்யப்படுகிறது.காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இருவரும் கடைபிடிக்க வேண்டும்.
அதில் சில நபர்கள் வேண்டுமென்ற பிரச்சினையை உருவாக்குகின்றனர். இந்த விவகாரத்தில் பிரச்சினையே இல்லை. குறிப்பாக தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும் என்றார்.
மேலும் அவர் மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.