சென்னை,
கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை ஓட்டியுள்ள கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருந்தது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசையும் ஓட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்தவரையில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 8 சென்டி மீட்டரும், வால்பாறையில் 7, சின்னக்கல்லார் 6, இரணியல், குளித்துறை, தக்கலை, குளச்சல் தலா 4, பாபநாசம், மயிலாடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், பெரியாறு தலா 3, செங்கோட்டை, தென்காசி, பேச்சிப்பாறை, பூதப்பாண்டி தலா 2, பொள்ளாச்சி, இளையாங்குடி, பொன்னேரி, ஆர்.எஸ்.மங்கலம், சேரன்மகாதேவி, திருவாடானை தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை பெய்தது. இவ்வாறு அவர் கூறினார்.