ஈரோடு,
ஈரோடு வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் 9-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 09.03.2026 முதல் 16.06.2026 முடிய 100 நாட்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாட்கள் தண்ணீர் திறப்பும் 25 நாட்கள் தண்ணீர் நிறுத்தம்) என்ற அடிப்படையில் 85.881 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வட்டத்திலுள்ள சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் அந்தியூர் ”அ” கிராமம் ஆகிய கிராமங்களிலுள்ள 2,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.