சென்னை,
83வது தேசிய சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தீனதயாளன் விஷ்வா மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வீரர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில், கார் டிரைவரும், தீனதயாளன் விஷ்வாவும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 3 வீரர்களும் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. அவரது இறப்புக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியை அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை அளிக்கிறது.
கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.