சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், புதுச்சேரி துணை நிலை கவர்னரும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தனுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.