தமிழக செய்திகள்

வங்கிகள் இணைப்பு வரவேற்கத்தக்கது; அமைச்சர் மாபா பாண்டியராஜன்

வங்கிகள் இணைப்பு வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

நாட்டில் 10 பொது துறை வங்கிகளை இணைப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வங்கி யூனியன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர்.

எனினும், அடுத்த 5 வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு நாட்டில் பொது துறை வங்கிகளை இணைப்பது கட்டாயம் என அரசு கூறியுள்ளது.

இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் இருக்காது. இது வங்கி ஊழியர்களுக்கு சிறந்த வசதிகளையே வழங்கும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.

இதனிடையே, வங்கிகள் இணைப்பால் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். எனினும், அவர்களுடைய சந்தேகம் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அதனை தெளிவுப்படுத்துவது என்பது மத்திய அரசின் கடமை என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் துறை பாதிப்பு என்பது தற்காலிகம் தான். விரைவில் இதிலிருந்து மீண்டு இந்திய பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.