திருப்பூர்,
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் எம்.புதுப்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் மூடிபோடாமல் திறந்து கிடந்த பகுதியில் நீல நிறத்தில் சக்கரம் வைத்த பெரிய சூட்கேஸ் ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது. இதையடுத்து அந்த வழியாக சென்ற சிலர் அதன் அருகே சென்று பார்த்தபோது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் சூட்கேசில் பெண்ணின் தலைமுடி தொங்கி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அந்த சூட்கேசை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிணவறையில் வைத்து அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கை, காலை மடக்கி உடலை சூட்கேசுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர்.
கழுத்தை இறுக்கி கொலை
அந்த பெண்ணின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டிருந்ததற்கான காயம் உள்ளது. அவர் நைட்டி அணிந்துள்ளார். காலில் மெட்டி அணிந்துள்ளார். காது மற்றும் கழுத்தில் நகை ஏதும் இல்லை. வலது கையில் ஆங்கிலத்தில் ஏ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. நெற்றியில் பொட்டு வைத்துள்ளார்.
அந்த பெண் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம், அதன் பின்னர் உடலை சூட்கேசில் வைத்து எடுத்து வந்து இங்கு போட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
அந்த பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் அவருடைய உடலை சூட்கேசில் அடைத்து ஏதாவது வாகனத்தில் கொண்டு வந்து சாக்கடை கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து முதலில் கொலையான பெண் யார்? என அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.