நாகர்கோவில்,
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் காசி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த காசி மீது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக செயல்பட்ட இளைஞர்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் காசியின் நண்பர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவரது பாஸ்போர்ட்டை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடக்கியுள்ளனர்.
மேலும் காசியின் மீதான 7 வழக்குகளில் கந்துவட்டி தொடர்பான ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் காசியை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.