தமிழக செய்திகள்

ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்து தரக்கோரி அமைச்சரின் காலில் விழுந்து கதறிய கொரோனா நோயாளியின் தம்பி

எப்படியாவது ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று அமைச்சரின் காலில் விழுந்து கொரோனா நோயாளியின் தம்பி கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ஆக்சிஜன் படுக்கைகள்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு வார்டை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதார். அப்போது தனது அண்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுவதாகவும், எப்படியாவது ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்து தருமாறும் கூறினார்.

உடனடி நடவடிக்கை

இதனைத்தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். உடனே 108 ஆம்புலன்சு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஆம்புலன்சு மூலம் குமரன் கல்லூரியில் உள்ள ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT