தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 11 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 4 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் விவசாயிகள் சிலர் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மணல், எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்ற கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல் சிவசேனா கட்சியின் மாநில துணைச்செயலாளர் குரு.அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள், போடி கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்ககைள் குறித்து மனு கொடுத்தனர்.