சென்னை,
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பை பொறுத்தவரை தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 850 நாடாளுமன்ற தொகுதிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பார்த்தோமேயானால் தமிழகத்தில் தற்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. 50 சதவீதம் அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது தமிழகத்திற்கு கூடுதலாக இன்னும் 20 நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரித்து 59 நாடாளுமன்ற தொகுதிகளாக அதன் எண்ணிக்கை உயரும்.
நாடு முழுவதும் இதே அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பு நடைபெற இருக்கிறது.
தற்போது நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவையும், அவசியமும் உருவாகி இருக்கிறது.
ஏனெனில் தற்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிறைவேற்றப்பட இருக்கிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரித்து வழங்கி தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்து அவர்களின் அறிவையும், ஆற்றலையும் தேசத்திற்காக பயன்படுத்துவதிலும், பெண்களை பெருமைப்படுத்துவதிலும் உறுதியாக இருக்கிறார்.
அந்த வகையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட உடன் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் மகளிர் இடம் பெறவேண்டும். அந்த வகையில் தற்போதுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என கணக்கில் கொண்டால் 181 தொகுதிகள் மகளிருக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் மகளிருக்கு அதை விட கூடுதலான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்குவதையும், தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் புதியதாக உயர்த்தப்படும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 850 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு என கணக்கிட்டால் 283 நாடாளுமன்ற தொகுதிகள் வரை மகளிருக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்ல நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தகுந்தார் போல் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் இதன் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திலிருந்து கூடுதல் எண்ணிக்கையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் உருவாவதற்கு வழிவகுக்கும்.
மேலும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நிர்வாக ரீதியாக வளர்ச்சிப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி இன்னும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் பரவலாக அனைத்து இன்னும் அதிகரிக்கும்.
ஆகவே தேசத்தின் எதிர்கால வளர்ச்சி, அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்பு, மகளிருக்கான பிரதிநிதித்துவம், சிறந்த நிர்வாக மேலாண்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலமாக விளிம்புநிலை மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக ஜனநாயக வாய்ப்புகளை வழங்கி அதிகாரமளித்தல் ஒன்றே உண்மையான சமூகநீதி என்பதை உறுதி செய்தல் என அனைத்து வகையிலும் ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சியாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் மறுசீரமைப்பு நடவடிக்கையை பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல் நிபுணர்கள், பல்வேறு துறைகளின் ஆகச்சிறந்த அனுபவமிக்க ஆளுமைகள் என பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களிடம் கலந்தாலோசித்து மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு மூலமாக அதிகரிப்பதையும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இதுவரை 40 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 8900 படுகொலைகள் நடந்திருக்கின்றன.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையையும் ஐந்தாண்டுகளில் எடுக்காமல்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதன் மூலமாக நாடாளுமன்றத்தில் மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவதை தடுக்க முயல்வது...
திமுகவின் மகளிர் விரோத மனப்பான்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முயற்சிக்காத திமுக..!!
பெண்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை தடுக்க முயற்சிக்கிறது..!!
திமுகவின் அவதூறு பிரசாரத்தை தமிழக மக்கள் அனைவரும் புறக்கணிப்போம்..!!
திமுக தலைமையிலான ஜனநாயக விரோத கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழர்கள் அனைவரும் புறக்கணிப்போம்..!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.