சென்னை,
உலக காது கேளாதோர் வார தொடக்க நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தனது பிறந்த நாளில் பல்வேறு நல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தவர் கருணாநிதி. மாற்று திறனாளிகளுக்கு தேவையானவற்றை திமுக அரசு வழங்கும்.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 1,35,572 பேருக்கு ரூ.108 கோடி செலவில் புதிய காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மேலும் தொடர்வதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகள் வாங்குவதற்காக, ரூ.10 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 98.9 லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கியிருக்கிறேன்.
பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளன. புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சை செய்து முறையான பயிற்சி மூலம் பேசும் திறனை பெற்ற குழந்தைகளையும் நான் கண்டிருக்கிறேன். விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.