காஞ்சிபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நகரான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு இன்று காலை சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவில் இல்லத்தில் அவரிடம் வாழ்த்து பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் எண்ணம் நிறைவேறி உள்ளது. எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை எப்போதும் அறிஞர் அண்ணா வழங்குவார். அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம். அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடைபோடும். அவ்வாறுதான் அண்ணா இல்லத்தின் வைக்கப்பட்டிருந்த குறிப்பேடில் கையெழுத்திட்டேன். நிதி நிலை அறிக்கை வரும்போது அதில் அண்ணாவின் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இணைந்து தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். மாலையில் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
முன்னதாக முதல்-அமைச்சர் வருகையையொட்டி அவரது பயணப்பாதையில் வழிநெடுகிலும் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் நகரம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.