வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 60). விவசாயியான இவர், கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி நள்ளிரவு கஜா புயல் காற்றுடன், பலத்த மழை பெய்தபோது இவருடைய கூரை வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் நிவாரண முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார். புயலுக்கு கூரை வீட்டை இழந்ததால் கோபால் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இதுபற்றி தனது உறவினர்களிடம் வருத்தமாக பேசி வந்தார்.
உறவினர்கள் ஆறுதல் கூறியும் மனவேதனை தீராததால் நேற்று முன்தினம் கோபால், அந்த பகுதியில் உள்ள முந்திரி மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.